Breaking News

6/recent/ticker-posts

சுட்டெரிக்கும் வெயில்-வெப்பஅலையில் இருந்து பாதுகாப்பது எப்படி?

 

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்து வெப்பஅலை வீசி வருகிறது. இந்த நிலையில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்வது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக பொது சகாதார இயக்கனர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் கூடுவதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வெப்ப அலைகளின் தாக்கம்ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்திட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே செல்லும் பொழுதும் வீட்டில் இருக்கும் பொழுதும் தேவையான அளவிற்கு குடிநீரைப் பருக வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் வியர்வை மூலம் நீர் இழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும்.

வெயிலின் தாக்கத்தால் அதிக பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ள சாலையோர வியாபாரிகள், கட்டடத் தொழிலாளர்கள், மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், பேருந்து நடத்துநர், ஓட்டுநர் மற்றும் பயணிகள் விவசாயிகள், ஆன்லைன் மூலமாக உணவு மற்றும் வீட்டுத் தேவை பொருட்கள் விநியோகிப்பவர்கள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு பணியாளர்கள் குறிப்பாக போக்குவரத்துக் காவலர்கள் ஆகியோர் மிகக் கவனமுடன் இருக்க வேண்டும்.

குழந்தைகள் குறிப்பாக பச்சிளம் குழந்தைகள் நோய்வாய்ப்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் வயது முதிர்ந்தோர் மற்றும் நோய்வாய் பட்டவர்கள் ஆகியோரும் மிகக் கவனமுடன் வெயிலில் செல்லாமல் முன்எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.அடிக்கடி வேலை நிமித்தமாக வெயிலில் செல்லும் நபர்கள், திறந்தவெளியில் வேலை செய்பவர்கள் போதிய அளவுக்கு குடிநீரைப் பருக வேண்டும். அதிலும், ORS எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பருகுவது நல்லது.

பொதுமக்கள் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நல வாழ்வு மையங்கள் (துணை சுகாதார நிலையங்கள்). அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள, ORS கார்னரில் வைக்கப்பட்டுள்ள உப்பு சர்க்கரை கரைசலை பருகி வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்